இலங்கை பொறியியல் பேரவையினால் சூரிய சக்தி தொழில்நுட்ப வல்லுநர்களை ஒழுங்குபடுத்துவதற்கான உரிய விதிகள் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கமைய, 2028 ஜனவரி 01 ஆம் திகதி முதல் 2029 டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சூரிய சக்தி தொழில்நுட்ப வல்லுநராக அது தொடர்பான பணிகளில் ஈடுபடுவதற்கு, அவ்விருத்தி தொடர்பில் தேசிய தொழில்முறை தகுதி (NVQ) மட்டம் 3 குறைந்தபட்ச தகுதியாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2030 ஜனவரி 01 ஆம் திகதிக்குப் பின்னர் சூரிய சக்தி தொழில்நுட்ப வல்லுநராக உரிய பணிகளில் ஈடுபடுவதற்கு, குறைந்தபட்சம் சூரிய சக்தி தொழில்நுட்பம் தொடர்பான தேசிய தொழில்முறை தகுதி (NVQ) மட்டம் 4 ஐப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
அத்துடன், பொறியியல் தொழில்நுட்பவியலாளராக இலங்கை பொறியியல் பேரவையில் பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 5,000 சூரிய சக்தி தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 100 ஆலோசகர்கள்/பரிசோதகர்களை உருவாக்கும் திட்டமொன்றை இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் இணைந்து ஆரம்பித்துள்ளன.
2030 ஆம் ஆண்டளவில் 70% புதுப்பிக்கத்தக்க சக்தி இலக்கை அடைவதற்காக, ஆண்டுதோறும் சுமார் 600 மெகாவாட் கொள்ளளவு சூரிய சக்தி அமைப்புகள் மூலம் தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் சேர்க்கப்பட வேண்டும்.
தற்போது சூரிய சக்தி அமைப்புகளை இறக்குமதி செய்வதற்கும் பொருத்துவதற்கும் 1,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையிடமிருந்து அனுமதிப்பத்திரம் பெற்றுள்ளன.
தற்சமயம் சூரிய சக்தி கட்டமைப்புத் துறையில் சுமார் 10,000 பேர் பணிபுரிந்தபோதிலும், அவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு இத்துறையின் தேர்ச்சி தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட தொழிற்துறை சான்றிதழ் இல்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
ஆண்டுதோறும் சுமார் 600 மெகாவாட் சூரிய சக்தி அமைப்புகளைப் பொருத்தும் திட்டத்திற்கு ஆண்டிற்கு 5,000 சூரிய சக்தி தொழில்நுட்ப வல்லுநர்கள் உருவாக்கப்பட வேண்டும்.
இருப்பினும், சூரிய சக்தி தொழில்நுட்பம் குறித்து பயில்வதற்கு தேவையான வசதிகளைக் கொண்ட பயிற்சி மையங்களும் குறைவாகவே உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிடுகிறது.
சூரிய சக்தி தொழில்நுட்பம் சார்ந்த ஆலோசகர்களின் எண்ணிக்கையும் மிகவும் வரம்புக்குட்பட்டதாகவே உள்ளது.
இப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், 5,000 சூரிய சக்தி தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 100 ஆலோசகர்கள்/பரிசோதகர்களை உருவாக்கும் திட்டத்தை இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் நடைமுறைப்படுத்தின.
இத்திட்டத்தின் கீழ் 1,500 சூரிய சக்தி தொழில்நுட்ப வல்லுநர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
இவ்வாறு பயிற்சி பெற்ற வல்லுநர்களுக்கு சூரிய சக்தி தொழில்நுட்பம் தொடர்பாக RPL முறையின் கீழ் விரைவாக NVQ3 சான்றிதழை வழங்குவதற்கான விசேட திட்டமொன்று தற்போது செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
அத்திட்டத்தின் கீழ், சூரிய சக்தி தொழில்நுட்ப வல்லுநராக 2 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவமுள்ள தொழில்நுட்பவியலாளர்களுக்கு இலவசமாக NVQ சான்றிதழ் வழங்கப்படும்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










