நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக சீனத் தூதுவர் நீதி அமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார மற்றும் இலங்கையின் புதிய சீனா தூதுவர் வெய் ஹுவாஷியாங் ஆகியோருக்கி டையிலான சந்திப்பொன்று 16.09.2026 அன்று நீதி அமைச்சில் இடம்பெற்றது.
சீன மக்கள் குடியரசின் நீதித்துறையில் டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு வருவதால், இலங்கையின் நீதித்துறையின் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு தமது ஆதரவை வழங்குவதாக சீனத் தூதுவர் இங்கு குறிப்பிட்டார்.
மேலும் , இலங்கை நீதித்துறையை டிஜிட்டல்மயமாக்கும் திட்டம், ஊழலைக் குறைக்க தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள், ஈ-கோர்ட் திட்டம், நீதிமன்ற கட்டமைப்புக்கு குரல்-எழுத்து தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், நீதித்துறைக்கான அடிப்படை வசதிகளை வழங்குதல், சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், வழக்குப்பொருட்களை அப்புறப்படுத்தும் முறைகள் உள்ளிட்ட நீதித்துறையின் மறுசீரமைப்பு குறித்து அமைச்சர் சீனத் தூதுவருக்கு விளக்கமளித்தார்.
அத்துடன் சீன நீதித்துறையில் குரல்-எழுத்து தொழில்நுட்பம் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுவதாகவும், தகவல்களைப் பெறும் போது நீதித்துறை முறைமைகள் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருப்பதாகவும் தூதுவர் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் இருதரப்பு புரிந்துணர்வின் அடிப்படையில், இலங்கையின் தொடர்ச்சியான வளர்ச்சித் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஆதரவளிப்பது குறித்து இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டது.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










